ஊறுகாய் புல் தயாரிப்பு - Silage Making

  • பசுந்தீவனங்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில்( மழைக் காலங்கள் ) தேவைக்கு போக மீதம் இருப்பவற்றை பதப்படுத்தி ,அவற்றை கோடைக்காலங்களில் பயன்படுத்த இது ஒரு சிறந்த முறையாகும் .
  • முற்றிபோன மற்றும் தடிமான தண்டுடைய தீவனப்பயிர்களை இதன் மூலம் பதப்படுத்தி அவற்றின் தரத்தை உயர்த்தலாம்.மேலும் இவைகள் வீணாகாமல் கால்நடைகள் உட்கொள்ளும்.
  • இதில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் பசுந்தீவனத்தின் தன்மை மற்றும் சத்துகள் மாறுவதில்லை.எனவே பசுந்தீவனம் கிடைக்காத கோடை காலங்களில் ஊறுகாய் புல்லை கால்நடைகளுக்கு அளித்து ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் பராமரிக்கலாம்.
  • தீவனப்பயிருடன் உள்ள களை விதைகள் இம்முறையில் அழிந்துவிடும்.
  • ஊறுகாய் புல் பல ஆண்டுகளுக்கு கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.

செய்முறை


  • மக்காசோளம் , சோளம்,கரும்பு தோகை,  கம்பு , CO-3 மற்றும் CO-4 போன்றவை ஊறுகாய் புல் தயாரிக்க ஏற்றவையாகும்.
  • ஊறுகாய் புல் குழி - மேட்டுப்பாங்கான இடத்தில் மழை நீர் மற்றும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட வேண்டும்.
  • அளவு - 1 மீ x 1மீ  x 1மீ அளவு குழியில் 500 கிலோ தீவனப்பயிரை சேமிக்கலாம்.
  • குழி அமைக்க முடியாத இடங்களில் கோபுரம் போல சிமெண்டில் அமைத்து அதில் பதப்படுத்தி தயார் செய்யலாம்.
  • தீவனப்பயிர்களை பதப்படுத்த சேர்க்கவேண்டிய பொருள்கள் -- சர்க்கரை பாகு( 4 விழுக்காடு ) , அசிடிக் அமிலம் அல்லது சிட்ரிக் அமிலம் ( 1 % ) , தவிடு அல்லது சோளம் அல்லது கம்பு அல்லது மக்காசோளம் (5 %), சுண்ணாம்புத்தூள் ( 1 %).
  • பசுந்தீவனப் பயிர்களை பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து ஈரப்பதம் 60 விழுக்காடு வரை உலர்த்த வேண்டும். அதாவது 3 முதல் 5 மணி நேரம் வரை வயலில் அப்படியே போட்டுவிடவேண்டும்.
  • ஊறுகாய் புல் குழி முதலில் வைக்கோலை சிறிதளவு பரப்பி விடவேண்டும்.
  • பசுந்தீவனப்பயிர்களை தீவன நறுக்கிகளை ( Chaff Cutter ) கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கி குழியில் இடவேண்டும்.
  • ஒவ்வொரு 2 அடிக்கும் நன்றாக மிதித்து காற்றை வெளியேற்றி விடவேண்டும்.மேலும் ஒவ்வொரு 2 அடிக்கும் பதப்படுத்த தேவையான பொருட்களை சரியான அளவில் நன்றாக சேர்க்கவேண்டும்.
  • குழியை 2 நாட்களுக்குள் நிரப்பிவிடவேண்டும்.
  • மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே செல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்
  • நில மட்டத்திற்கு மேல் 5 - 6 அடி உயரம் வரை நிரப்பிய பின், பாலித்தீன் கொண்டு மூடி விடவேண்டும்.
  • இதன் மேல் சாணம் மற்றும் மண் கொண்டு காற்று புகாவண்ணம் பூசி மொழுகவேண்டும். இவற்றில் வெடிப்பு ஏற்பட்டால் சேறு அல்லது சாணம் கொண்டு பூசி காற்று உள்ளே புகுவதை தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் ஊறுகாய் புல் தீவனம் கெட்டுவிடும்.
  • 2 மாத காலத்தில் ஊறுகாய் புல் தீவனம் உபயோகத்திற்கு தயாராகிவிடும். தேவையானதை குழியின் ஒரு பகுதியிலிருந்து எடுக்கவேண்டும்.
  • ஒரு முறை குழியினை திறந்து விட்டால் எவ்வளவு விரைவில் உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்தவேண்டும்.